Wednesday, September 18, 2013

தேடி வந்த இடம் நல்ல இடம்


மனதில் கனவுகள் ஆயிரம் தேக்கி – பிள்ளையைப் பெற்ற
கனம் இனி குறையுமென்ற நம்பிக்கை கூட்டி
சிவன் தாங்கும் கங்கையாம் சிவகங்கைச் சீமையில், ஒரு மூலையில்,
பூவந்திச் சாலையில், அமைதிச் சூழலில், RASS எனும்
செவிலியர் கல்விச் சோலையில் அடியெடுத்து வைத்துள்ள பெற்றோர்களே!

வானத்தில் காணும் வட்ட நிலவைத் தொடலாமா – அல்லது
ஞானத்தில் சிறந்த அறிவியல் சாதனைகள் படைக்கலாமா – அல்லது
தானத்திலும் சிறந்த மானிடர் சேவையில் செவிலியர் ஆகலாமா – என்றுபல
கோணத்தில் சீரிய சிந்தனைப் பயணத்தில் தத்தளித்து – இறுதியில்
செவிலியர் ஆவதே மேலென எண்ணித் துணிந்த செவிலியர் பூந்தளிர்களே!

உங்களையும் உடன் வந்துள்ள உரிமை கொண்டவர்களையும்
இங்குநான் வணங்கிடுவேன்; வருக வருகவென வரவேற்பேன்.
வாழ்த்திடுவேன். இதற்கொரு வாய்பபளித்த கல்லூரி முதல்வருக்கும்
கடமைக் கடலில் முத்தெடுக்கும் தன்னலமற்ற தாளாளர் நிறுவனருக்கும்
நன்றி சொல்லி உடன் பணியாற்றூம் ஆசிரியர் அலுவலரையும் வணங்கி
இச்சிறு கவிதை படைத்தேன் பணிவோடு.

மனதில் உதித்தவை கனவுகள் என்றாலும்
தினமும் அவைகளுக்கு உயிர் கொடுக்க ஏங்கி - சொந்த
வாயைக் கட்டி வயிற்றை இறுக்கி பிள்ளையின்
வளம் கூட்ட வாழ்வில் ஏற்றம் காண இங்கு இடம் பெற்றீர்.
உளமாறச் சொல்வேன் ஒளிமயமான நாட்கள் உங்கள் பிள்ளைக்குண்டு.

கனவு காணலாம் ஆனால் பகற்கனவு காண்பது தவறு - ஆனாலும்
உங்கள் கனவு பகற்கனவல்ல பலிக்கும் கனவுதான் - ஏனெனில்
உங்கள் நினைவில் நின்றவை நனவாக நல்ல இடம் தேர்வு செய்தீர்.
நடக்கப் போகும் நாட்கள் இனி நல்லவைதான் இதில் ஐயமில்லை.
தொடக்கம் நல்லது எனில் முடிவும் அப்படியே அமையும் - உண்மை.

எங்களை நம்பி உங்கள் பிள்ளையை இங்கு சேர்த்தபின்
உங்கள் கனவு நனவாகும் அந்தநாள் இனி நெருங்கும்;
தங்கக் கலசம் ஏந்தி தத்தித் தாவி மெல்ல
வங்கக் கடலில் முத்தெடுத்து பெருமை சேர்க்கும் நாளும் நெருங்கும்.
பொங்கும் சூழ்நிலை பலகண்டு வாழ்வில் ஏற்றமே காண்பீர்.

இங்கு பயிலப் போகும் உங்கள் பிள்ளைக்கு
தங்கிப் படிக்க நல்லதொரு விடுதி உண்டு;
தரமான உணவு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உண்டு;
தாயாக இருந்து வழிநடத்தும் நல்ல காப்பாளர் உண்டு;
காற்றில் அசைந்தாடும் செடிநிழலில் இளைப்பாற இடமுண்டு.
இனி என்ன வேண்டும்?

மங்காப் புகழ் கொண்ட மாமன்னர் திருமலை நாயக்கன் அன்று
மங்கை மீனாட்சிக்குக் கட்டிய மதுரைக் கோபுரம் ஒருபுறமும்;
மருது பாண்டியர் ஆண்ட சிவகங்கைக் கோட்டை அரன்மனை மறுபுறமும்;
மனம் நெகிழ்ந்து துதிக்க ஏசுபிரான் தலங்கள் நாற்புறம் உண்டு,
தினம் ஐந்துமுறை தொழுகைக்கு அல்லாவின் பள்ளி வாசலும் அருகிலுண்டு.
இனி என்ன வேண்டும்?

சோதனைக் கூடங்கள் உண்டு வகுப்பில் சொன்னதன் உண்மை அறிய
சாதனை படைப்போருக்கு வாய்ப்பளிக்க போட்டிகள் உண்டு.
நல்லபல நூல்கள் ஆயிரம் உண்டு நூலகத்தில்.
சொல்லில் தேர்ந்த சிறந்த ஆசிரியர் பெருமக்கள் இங்குண்டு.
எல்லாவற்றிற்கும் மேலாக நூற்றுக்கு நூறு தேர்ச்சியும் ஊண்டு.
இனி என்ன வேண்டும்?

கல்லூரி முதல்வர் இளம் மாணவியருக்கு அரவணைப்பில் அன்னை,
சொல்லில் நல்லவர், செயலில் வல்லவர்,  
நல்லபல திட்டங்களை செயலாற்றத் துணிந்தவர்;
என்றெல்லாம் புகழலாம்; இவற்றிற் கெல்லாம் கலங்கரை விளக்காய்
என்றும் வெற்றிக்கு வழிகாட்டும் சேவையில் நமது நிறுவனர்-இது உண்மை.
இனி என்ன வேண்டும்?
  
இறுதியாக ஒன்று சொல்வேன் அதையும் அடித்துச் சொல்வேன்;
உறுதியாக நீங்கள் தேடி வந்த இடம் நல்ல இடமே.
அந்நியர் அல்ல நாங்கள் உமக்கு அனைத்திலும் நன்மையே கூடும்;
எண்ணியபடி எல்லாம் நடக்கும் எள்ளளவும் ஐயம் வேண்டாம்;
கண்ணியம் காத்து காலத்தை வெல்வோம் வாரீர்.
                        * * *
2013-’14-ம் ஆண்டு மாணவியர் மற்றும் பெற்றோர்களை வரவேற்கும் விழாவில் வாசிக்கப் பட்டத (செப்டம்பர் 2013)..
 

Friday, August 23, 2013

2013 - நான்காம் ஆண்டு மாணவியருக்கு வாழ்த்துக்கள்



மேடையில் ஏற்றி விட்டோம் இவரென்ன சொல்லப் போகிறாறோவென
ஆவலோடு இருக்கிறீர்களா வெளியே ஓடலாமென நினக்கிறீர்களா?
பாடறியேன் பாட்டறியேன் பள்ளிக்கூடம் நானறியேன் – இது அன்று;
பாடவும் செய்வேன் பாட்டெழெழுதவும் செய்வேன் – இது இன்று.
நான்காண்டு உழைத்துக் களைப்புற்ற அருமைச் செல்லங்களே– உம்மை
வாழ்த்திட தமிழ்க் கவிதை ஓடத்தில் பயணம் கண்டேன்.  
  
இந்தக் கவிதைச் சொற்களை எண்ணி ரசிக்கலாம்
காலமெல்லாம் சொல்லிச் சிரிக்கலாம்.
ரசனையும் சிரிப்பும் கலந்து விட்டால்
வசன கவிதையும் உம்மை மயங்க வைக்கும்.
காதுகளைக் கொஞ்சம் தீட்டிக் கொள்ளுங்கள் – கைவசம்
காகித அம்புகள் இருந்தால் அவற்றைப் பையில் பதுக்கி வையுங்கள்.

ஆண்டிறுதி என்றாலே சிலருக்கு உதறல் எடுக்கும்
ஏனென்று கேட்டால் ஏட்டிக்குப் போட்டி பதில் வரும்.
சிலர் சொல்வார் தேர்வுச் சனியன் வந்திடும் என்று;
பலர் சொல்வார் படித்துத் தொலைக்க வேண்டுமே என்று;
நான் சொல்வேன் சுமை இறங்கும் நாளின்று வந்ததென்று.
நீங்களென்ன சொல்லப் போகிறீர்? - செல்லங்களே சொல்லுங்கள்.

நானொன்று சொல்வேனென மெல்லக் கிசுகிசுக்கும் சொற்கள்
நாலுபேர் நாவினில் தவழ்வதை நயமாகச் சொல்லட்டுமா? – அப்பாடா
தொல்லை தீர்ந்ததென மெல்லும் வார்த்தைகள் ஒருபக்கம்
சொல்லி மாளாத இடைத் தேர்வுகள் இனியில்லையென மறுபக்கம்.
தொல்லை முற்றும் தீர்ந்ததென்ற பெருமூச்சு இன்னொரு பக்கம்;
இனியென்ன பட்டம்தானென காணும் கனவுகள் நாலாபக்கம் –  சரியா?

இல்லையில்லை இன்னும்பல உண்டென சொல்லத் துடிப்பர் சிலர்;
நல்ல வேளை நானே அறிந்ததை நாலிரண்டு இன்னும் சொல்வேன்.
ஏனின்று வகுப்பிற்கு தாமதமென யாருமினி கேட்க மாட்டார்;
நானிங்கு கத்துகிறேன் தூக்கமா உனக்கென யாரும் கேளார்:
என்ன சொல்லியும் ஏறவில்லையா? இப்படி யாரும் கேளார்:
எக்கேடு கெட்டாலும் எனக்கென்னவென இனி யார் சொல்வார்- சரிதானே?

கவிதையால் சொற்களை அடுக்கி, அழகுபடுத்தி அலங்கரித்து
சிரிக்கவும் வைக்கலாம் சிந்திக்கவும் வைக்கலாம் – சுருக்கமாய்
சொல்லும் பொருளும் இணைந்து வள்ளள்களை வாழ்த்துவது மரபு.
இங்கு யார் வள்ளல் என்கிறீர்களா? – தயக்கமே வேண்டாம்
நன்கு வளர்ந்து வரும் நம் கல்லூரியின் நிறுவனர் சங்கர்தானே? 
இங்குமக்கு செவிலியர் பட்டம் பெற உதவிய நடுவரும் வள்ளலன்றோ.

இருண்டவன் கண்ணுக்கு அரண்டதெல்லாம் பேயென்பார் சிலர்
இருளில் நடக்கக் கற்றுக் கொண்டால் இரவேது பகலேது?
இரண்டாயிரத்து பதிமூன்றில் நாமின்று பயணிக்கிறோம்;
இது சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டென்பார் – நடப்பில்
குடிக்க தண்ணீரும் காணோம் பசுமை வயல்களும் காணோம்; 
இனிவரும் நாட்களை எண்ணி நோகின்றோம் உதவிட யாருமில்லை.

அண்டை மாநிலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடக்கண்டோம்;
அருமைத் தமிழ்நாட்டில் கண்ணீர்தான் சிந்தக் கண்டோம்.
நமக்கா தண்ணீர் பஞ்சமென்பார் சிலர் உண்மைதான் - ஆனால்
வேறு தண்ணீர் இது வேறு தண்ணீர் இரண்டும் ஒன்றல்ல.
ஒருகுவளை தண்ணீர் ஊற்றி, கைகால் நடுங்க, நாவுழற
நடுரோட்டில் புரளும் நாட்களை எண்ணி நோவதால் என்ன பயன்?

வாழ்த்துச் சொல்ல வந்தநான் தடம் புரண்டு பேசுகின்றேனா?– இல்லை.
ஆழ்ந்து சிந்திக்க உம்மைக் கைகூப்பி அழைக்கின்றேன் – இனிவரும் நாட்களில் மதுவை ஒழிப்போம் நம் மாண்பினைக் காப்போம்.
தெருவெங்கும் இதை எடுத்துக் கூறுவோம் - எனெனில்
உங்கள்கைகள் உரமிகுந்த கைகள் ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள்.
தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டின் பொருளை மாற்றிக் காட்டுங்கள்.

வாழ்க வளமுடன்! தேர்வில் அனைவரும் தேர்ச்சிபெற்று
வாழ்வில் அனைத்து வளமும்பெற ஆசிகள் ஆயிரம்.
உங்கள் வெற்றியில் எங்களுக்கும் பங்குண்டு – வரலாற்றில்
உங்கள் வெற்றி ஒரு மைல்கல் ஆகட்டும் - இதையே
மெட்ரிக் முறையில் கிலோமீட்டர் கல்லென்று
சற்று மாற்றிச் சொன்னாலும் சரிதான் மறுக்க மாட்டேன் - ஏனெனில்
சட்டி ஓட்டையானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரிதானே!. 

மீண்டும் என் வாழ்த்துக்கள்! நன்றி! வணக்கம்!  
                           * * *
=>22. 08. 2013 அன்று RASS ACADEMY NURSING கல்லூரி நான்காமாண்டு மாணவியர்கள் விடைபெறும் விழாவில் வாசித்தது.