<
தமிழ் எழுத்தால் முடியாதா? தனித்தொலித்தால் விடியாதா? >
தமிழெழுத்தால் முடியாதா? தனித்தொலித்தால் விடியாதா? - இத்தலைப்பு
அமிழ்தமாய்ப் பட்டாலும் கன்னத்தில் அறைந்தாற்போல் இருக்கக் கண்டேன்.
எதைச் சொல்லி எடுத்துரைப்பேன் என்வாதம் எடுபடுமா என்றெண்ணி – சற்று
பதைத்து விட்டாலும் சிந்தனை தெளிவுகண்டு சிறுகவிதை தொடுத்தேன் இங்கு.
துணையின்றி செயல்பட்டு பிறமொழியை ஓரம்கட்டி - எழுத்தால்
தனித்தன்மை கொண்டது தமிழென அறிவாய் தோழா.
அகரவரிசை தாண்டி லகரழகர மெல்லாம் வேறெந்த மொழியிலுண்டு? - இன்னும்
சிகரமாய் தண்ணீர், வெந்நீர், பன்னீரென ஓரெழுத்து வித்தை தமிழில்தான்
உண்டு.
டண்ணகரத்தில் தண்ணீர் தன்னகரத்தில் வெந்நீர் றன்னரத்தில் பன்னீர்
கண்டோம். .
தேனீர் என்று சொன்னால் தேள்வந்து கொட்டிடுமா? – இதைமறந்து
நானிதோ துயிலெழுந்தேன் கொண்டுவா டீயை என்பதில் எதைக் கண்டீர்?
கடைக்குச் செல்கிறேன் என்று சொன்னால் கடைவாசல் திறக்காதா? - மெல்லச்சிறு
நடையால் ‘ஷாப்பிங்’
செல்கிறேன் என்றுரைத்து ஏற்றமென்ன
கண்டீர்?
வேட்டியை வேஷ்டி என்று சொல்வது ஏனோ? –
அது என்விருப்பம் என்றால் ஆட்டுக்
குட்டியை ஆஷ்டு குட்டியெனச் சொல்வதும் தகுமா? எடுபடுமா?
‘டூட்T’ மறந்து ‘லூட்T' அடிக்கிறான் என்றெழுதி மகிழ்வது என்ன மொழியோ? - போதும் சேட்டைகள்
கூட்டி வேட்டையாடி கொல்ல வேண்டாம் தமிழ் பிழைக்கட்டும்.
ஆழ்ந்து சிந்திப்பீர் அலைபாயும் ஐயம் தெளிவீர் – தமிழதன் எழுத்தால்
வீழ்ந்து விடவில்லை விழித்தொருநாள் விடியலைக் காண்போம் திண்ணம் -ஆனால்
தமிழுக்கிணை தமிழேயென தம்பட்டம் அடித்து திரைமறைவில்
அமிழ்து மொழியை அரைகுறை மொழியாக்கும் அலங்கோல விளையாட்டு
இனியும் வேண்டாம் எனக்கூறி எளியோன் விடைபெறுவேன்.
* * *காமாராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாமதுரை கவிஞர் பேரவை சார்பாக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பரிசுபெற்ற கவிதை.
"கவி பாரதி" என்னும் பட்டத்துடன் சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. நாள்: 27.07.2016.
No comments:
Post a Comment