Tuesday, January 7, 2014

இரண்டாயிரத்தி பதினான்கில் நமது கடமை

புத்தாண்டு பிறக்குமெனில் புதுமைகள் மலருமென்பார் – இதுவெறும்
தத்துவமல்ல தரணிவாழ் மாந்தர்கண்ட அனுபவம் தானிது.
நித்தமொரு சோதணை நீங்காத வேதனைதான் என்பார் – அப்பப்பா 
மெத்தப் படித்தவனும் மேணிவாட உழைப்பவனும் நோகின்றார்.

இன்றிருப்பவை நாளையில்லை நாளை நடப்பவை யாரறிவார் - மெய்யில்
அன்றாடம் நடக்கும் நிகழ்வின் பின்னணியும் புரியவில்லை.
நின்றாலும் வம்பு நடந்தாலும் வம்பென நொந்ததுதான் மிஞ்சும் – போதும் சென்றுவருகிறே னென்றாலும் விடமாட்டார் இதை யாரிடம் சொல்ல?

நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோமென சொன்னாலும் - அந்த
பொல்லாத நேரமும் போதாத காலமும் மெல்லநம் வழியில் குறுக்கிடும்.
தொல்லைகள் நம்மை துரத்திடும் திரும்பிப் பார்த்தாலும் மிரட்டிடும் – பின் கொல்லைவழி வந்து நம்மைக் கைகோர்த்து கெடுத்து மகிழும் உண்மை.

நாடெங்கிலும் ஊழல்; நல்லவர் யாரென புரியவில்லை – எங்கெங்கும்   
தேடினும் நாட்டிலொரு நல்லவரைக் காண்பது அரிதிலும் அரிது.
ஓடியொளிந்து புகார் கொடுத்தால் அங்கும் ஊழலே தளிர்க்கும் - துணிந்து
சாடினால் துயரம்தான் மிஞ்சும் தூக்கமும் கெடும் யாரிடம் சொல்வேன்?    

நூறு ஆயிரமென லஞ்சமெனில் பணியிடைநீக்கம், சிறைச்சாலை- ஆனால்  கூறுபோட கைநோகும் கோடிகள் பெற்றால் சிறையடைப்பு ஒரு நாடகம்.
ஆறேழு மாதங்கள் சென்றால் எக்காளம் பேசுகின்றார் - மீண்டும்
வீறுநடை போடுகின்றார்; தெருவில் வக்காளத்து தேடுகின்றார்.

இதுதான் காந்திமகான் தந்த பாரதத் தாயின் அவலம் – இனியொரு புதுமையைப் படைக்கத் துடிக்கும் இளம் நெஞ்சங்களே எழுமின்.
இதுதான் தருணம் இரண்டாயிரத்துப் பதினான்கின் தொடக்கம் – இன்னல் எதுவானாலும் லஞ்ச லாவண்யத்தைக் கிள்ளி எறிவோம் வாரீர்.
                                                                               * * *

நாட்டில் நிலவும் லஞ்ச லாவண்யத்திற்கு எதிராக மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகையில் (01.01.2014)-ல் படைக்கப்பட்டது. 

No comments:

Post a Comment