Tuesday, January 7, 2014

நிறுவனரின் பெருமை பாடி நாம் பெருமை அடைவோம்



தோன்றின் புகழொடு தோன்றுகஇவை
வள்ளுவன் மொழிந்த சொற்கள்.
இதன்பொருள் நீரன்றி யானுமறிவேன் - என்றாலும்
வள்ளுவன் சொல்லில் வலிமை இல்லையென்பேன்.

இஃதென்ன புதிர் போடுகிறார் என்பார் சிலர் - இவர்
எதையோ எண்ணி புலம்புகிறார் என்பார் இன்னும் சிலர்.
இதோ விளங்கச் சொல்வேன் கேளுங்கள்ஒருகணம்
சிந்தித்து உள்ளதைக் கூறுங்கள்.

பிறக்கும் போதே புகழொடு பிறவாய் என்றால்
கருவில் உள்ள குழந்தைக்கு என்ன தெரியும்? - அவ்வழியே
பிறவியில் புகழொடு பிறந்தாலும் அதை
இறுதிவரை காப்பதும் பெரும் சுமையன்றோ.

இன்றுநாம் கைகோர்த்துக் கூடியமர்ந்து வாயார
பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அழைத்த நாயகர் 
புகழொடு தோன்றியவரா அல்லது புகழ் சேர்த்தவரா? தொடுக்கும்
கேள்விகள் புதிரா அல்லது புத்தி தடுமாற்றமா?

நயமாக நான் சொல்வேன்என் சொற்கள்
புதிருமல்ல புத்தி தடுமாற்றமும் அல்ல.
பொருளில் ஆழப்புகுந்து அலசிப் பார்த்தேன்நன்கு
உணர்ந்துதான் இக்கேள்விகள் தொடுத்தேன்.

புகழொடு தோன்றினாரெனில் பெருமை தாய் தந்தைக்கு;
பிறந்தபின் புகழென்றால் அதுநம் நாயகருக்கே.
நாமறிந்த மட்டும் பெருமை பின்னவர்க்கே எனலாம்ஆயினும்
தாய் தந்தையர் ஊக்கமும் ஆக்கமும் இமையத்திலும் உயர்ந்தது.

நாயகராய் இங்கு அமர வைத்து - அமரும்
இருக்கைக்கும் அழகு சேர்த்து
வாயாரப் புகழ்பாடி வாழ்த்துக்கள் பலகூற
நம்மவர்க்கே சாலப் பொருந்தும் என்பேன்.

புகழொடு பிறக்கும் வித்தை அறியாத நம்நாயகர்
பிறந்து வளர்ந்து பிறர்போற்றும் வண்ணம்                                 
நாடு நமக்கென்ன செய்ததென எண்ணாமல்
நாட்டிற்கு நாமென்ன செய்தோமென எண்ணினாரோ?

ஒன்று செய்தால் போதும்அதையும்
நன்று செய்தால் நல்லதுவிரும்பி
இன்றே செய்தால் இன்னும் நல்லதென
எண்ணித் துணிந்து ஓராயிரம் செய்து விட்டார்.

அன்ன சத்திரம் ஆயிரம் தொட்டாலும் ஆங்கொரு
அறிவுப் பூங்காவை அமைத்து விட்டால்
அதுதான் பெருமையிலும் பெருமை என்பேன்இதைத்தான்
நம்நாயகர் செய்துள்ளார் வாயாரப் புகழ்வோம் வாரீர்.

உயிர் காக்கும் உன்னதக் கல்வி புகட்டும்
செவிலியர் கல்லூரி தொடங்கி
போட்டிகள் மிகுந்த உலகில் எதிர்நீச்சல் போட்டு
சொந்த முயற்சியால் வெற்றிக்கொடி நாட்டினார்.

வரலாற்றில் ஒரு இங்கர்சால்இன்றுநம்
கண்முன் ஒரு சங்கர்(லால்) - வாழ்வின்
தத்துவமறிந்து தனித்துநின்று சாதனை படைத்தார்;
பெரும்புகழைத் தானே சேர்த்தார் – எனவே

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்றென்பது ஏற்புடையதா? - இங்கு
நேரில் வாதாட வள்ளுவன் இல்லையேஇருந்தால்
வரிகளை மாற்றுங்கள் எனலாம் - ஆனாலும் 

நமக்கேன் வீண்வம்பு? வாழ்க வள்ளுவன் புலமை!
இன்றிங்கே நம்மில் ஒருவராய் வலம்வந்து
அன்பு, அடக்கம், இனியசொல், இன்முகம் கொண்டநம் நிறுவனரின்
பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்வோம்.

அவர்தம் பெருமைபாடி, பொன்னாடை போர்த்தி,
பரிசளித்து நாமும் பெருமிதம் கொள்வோம்.
வாழ்க பல்லாண்டு. வளர்க அவர்தம் தொண்டு!
ஆலவிழுதாய் அணைத்து நின்று அன்னவர் நிழழில்  
நாமும் சுகம் காண்போம்; வளம் பெறுவோம் வாரீர்!
                                (10.01.2012)

No comments:

Post a Comment