நானிந்தப் பள்ளியிலே பணிசெய்த
நாளெல்லாம் என்நினைவில்
தேனாக இனிக்கக் கண்டேன் தெளிவுடனே
நான்சொல்வேன்.
போன நாட்கள் போயினவே இன்னுமேன்
முன்நினைவு
ஏனம்மா எனக்கேட்டால் என்னபதில்
நான் சொல்வேன்?
ஒன்றா இரண்டா அனுபவம் ஒருவரியில்
சொல்வதற்கு?
நன்றே சற்றுநான் எண்ணிப் பார்த்தேன்
நயமாகச் நானுரைப்பேன்.
ஒன்றே ஒன்று சொல்வேன் உங்கள்
அனைவருக்கும்
இன்றும் என்நினைவில் இருப்பவை
ஏராளம் ஏராளம்.
தலைமை ஆசிரியர் எனக்கொருநல்
வழிகாட்டி தானென்பேன்
கலைபல கற்றநல் ஆசிரிய சோதரிகள்
தம்மன்பை
அலைபோல அள்ளித் தெளித்த நாட்கள்
அற்புதமே
மலையாக நின்றபலர் உருகி நதியாக
உதவினரே.
இவையெல்லாம் இழந்து இன்று வேறுபள்ளி
சென்றடைந்தேன்
சுவையற்றுப் போனாலும் சூழ்நிலை
ஒன்றைக் கருதி
சுவைமேலும் மெருகுபட வேண்டுமென
எண்ணினேன் இதைஏற்பீர்
அவையில் அமர்ந்துள்ள அனைவரும்
ஆசிகள் வழங்கிடுவீர்.
நன்றியுடன் இருப்பேன் என்சொல்லை
நாளும் நம்பலாம்
சென்றஇடம் புதிதெனினும் ஒன்றாகிப்
பழகிவிட்டேன் பயமில்லை.
என்றும்இப் பள்ளியின் நினைவலைகள்
என்னில் நிரந்தரமே
சென்று வருவேன் விடைதாரீர்
நன்றிகூறி நானமர்வேன்.
No comments:
Post a Comment