Wednesday, November 23, 2011

கொடியவள் கொடியவளே

ஆங்கோ ருருவம் காண்பது பாரீர்
பாங்காய் நிலவில் பலநிறத் துடனே!
தீங்கனி யாம்நல் மாங்கனி ஈனும்
ஓங்குயர் மரத்தின் இளஞ்சிறு கிளையோ?

பலரும் பார்த்துப் பெருமகிழ் வெய்தும்
நிலவின் இயல்பை மழைபோ லெண்ணித்
திலகம் மலியும் இறகின் தோகை
உலரும் நிலையில் உளநல் மயிலோ?

வானக முவந்துக் கனிவுடன் காத்த
நானக மகிழ வளமுடன் திகழும்
கானக மெங்கும் களித்தே அலையும்
வானவ ருலகின் அம்புள்ளி மானோ?

அன்றே யன்று அனைத்து மன்று
சென்றே யாங்கு நோக்குவம் சிறிதே
என்றே யானும் எழுந்தே னன்றோ
கொன்றே யென்பல தொழில்தமை யாங்கு.

பத்திரு அடிகள் முன்வைத் தேயான்
அத்திரு உருவின் உண்மைப் பொருளை
இத்திரு மனதிற் கின்னே யுணர்த்த
நற்றிரு மனதாய் நகர்ந்தே னாங்கே.

என்னே வியப்பு என்றிரு வுளத்தில்!
முன்னே காணூம் அத்திரு உருவைத்
தன்னே ரில்லாத் தனியழ குடனே
வின்னே வியக்கும் பெண்ணாய்க் கண்டேன்.

அந்தப் பெண்ணும் அயலவள் அன்றே
எந்தன் மனதிற் கினியவ ளன்றி.
மந்தம் சிறிதென் மனதிற் கண்ட
எந்தன் நிலையை எங்கனம் நோவேன்?

கண்டேன் நேற்றக் காரிகை தன்னைக்
கொண்டேன் அவள்மேல் தனியாக் காதல்
இன்றே யவளை மீண்டும் காணச்
சென்றேன் முன்பே சொல்லிய விடத்தே.

கொடியவள் தன்னை எண்ணப் படியே
மடியினில் இறுத்தி மகிழ்ந்தே நானும்
நொடியினில் அவளை மயக்கிட எளிதாய்க்
கடிதெனச் சென்றேன் அவளோ டருகே.

பரபரப் புடனே நோக்கினா ளென்னை
உறவறி யாச்சிறு சேயென வாங்கே.
கிருகிருப் புற்றேன் அவளெனக் களித்த
திருதிருப் பார்வையில் பெரிதாய்க் குழம்பி.

பொங்கும் அவள்மனப் பொருளெனக் குணர்த்தா
திங்கும் அங்கும் விழித்தா ளாங்கே.
தங்கு மவ்வே காதல் மிகுந்த
அன்பே! என்றவோர் அயலொலி கேட்டேன்.

அடுத்த கணத்தில் அருகிருந் தவளும்
விடுத்த கணைபோல் விரைந்தா ளெங்கோ.
அடுத்தோ ருருவை என்னிடம் இருத்தி
உடுத்தவெள் ளுடையை உலைத்தைது நிலவும்.

மிடுக்குடன் நோக்கிட அந்தப் புதியோன்
திடுக்கிட் டேன்யான் திகைப்பு மிகுந்தே.
ஒடுக்கிட விழைந்தில னவனது செயலை
விடுத்திட என்றன் காதலை யன்றி.

நொந்தே யவள்தன் காதலை எண்ணி
வெந்தேன் என்றிரு வுள்ளத் தகத்தே.
வந்தே யவளெனை ஏய்த்ததை எண்ணிக்
கொன்றேன் எந்தன் காதலை முற்றும்.

படிறறி யாவென் பால்வெண் மனதிற்
குடிகொண் டவள்போல் குறுகிச் சென்றாள்.
துடியிடை என்றோர் அரும்பொரு ளுடைத்தும் - பூங்
கொடியவள் மிகவும் கொடியவள் திணிதே.

=> இயற்றிய நாள்: 16.11.1964
(இது ஒரு கற்பனைக் கவிதை)

No comments:

Post a Comment