Friday, November 25, 2011

மணமக்கள் வாழ்த்து

மணமகளே மணமகன்தன் மனங்கவர்ந்த இளமனமே,
குணமகளே, குலந்தழைக்கக் கரங்கொடுத்த திருமகளே,
கனவனைநீ தினம்வணங்கி கருத்திலவன் மனமறிந்து,
பணிவுடனே பணிசெய்து பல்லாண்டு வாழியநீ!

மணமகனே! மனமகள்தன் கரம்பிடித்த திருமகனே,
மணமகளை அடைந்திடநீர் தவமிருந்த கதையறிவோம்;
மனதினிலே நினைத்தவளை மணமேடை தனில்கண்டீர்,
கனிவுடனே கருத்தொன்றி கடலலையாய் வளம்பெறுவீர்.

பூமுடிந்த நார்மணக்கும் நார்பிடித்த கைகடுக்கும்,
நான்தொடுக்கும் சொல்லினிக்கும் சொல்புரண்டால் பொருள்மாறும்,
நானெதையும் சொல்லிடுவேன் நயமுடன் கேட்டிடுவீர்
ஆனாலும் ஏனோநான் அளவோடு வாழ்த்துகிறேன்.

வெற்றித் திருமகளை வினைதீர்க்கும் பெருமகளை
உற்ற பெயரினிலே உள்ளடக்கும் ஜெயபாலே,
கொற்றவன் தான்பெரியன் பொய்யில்லை யானாலும்
கொற்றவனை யேயடக்கும் ராஜரா ஜேஸ்வரியே,

கற்றறிந்த பெரியீரே பட்டறிவில் மூத்தோரே,
கற்றவித்தை சிறிதளவே கல்லாத துலகளவே,
உற்றதொரு தருணத்தில் ஓரிரண்டு சொல்லாலே
நற்றவத்திரு மணமக்களை நான்வாழ்த்தி அமர்வேனே.

=>1970-ல் திரு ஜெயபால்(பட்டதாரி ஆசிரியர், அச்சம்பட்டி உயர்நிலைப்பள்ளி)
அவர்களின் திருமணத்தில் வாசித்தது)

No comments:

Post a Comment