Thursday, November 24, 2011

*கணிதமா அறிவியலா?*

கணிதம்: அறிவியலே! அறிவியலே! உனையாரும் புரிந்திலரே-இதை
அறியாமல் ஏனுனக்கு இப்புவியில் வீண்பகட்டு?

அறிவியல்: கணிதமே! கணிதமே! நானென்றும் புனிதமே-ஒரு
கனிந்தசொல் இயம்பாது கடிந்தென்னைப் பேசுவதேன்?

கணி: பொய்யாகும் உன்சொற்கள் போதைதரும் உன்மழலை
மெய்யாகக் கூறிடுவேன் மேன்மைதரும் என்பயனே.

அறி: ஐயோ! இது அபசகுணம் அறியாமை தரும்மயக்கம்
மெய்யாககக் கூறிடுவேன் மேன்மைதரும் என்பயனே.

கணி: நானின்றி நீயில்லை நாளென்றும் இதைமறவாய்
பேனிடுவர் என்நலமே பேரறிஞர் பலர்யாண்டும்.

அறி: என்னறிவு இல்லையெனில் ஏதுலகில் நின்பெருமை?
ந்ன்குணர்ந்து பார்ப்போர்க்கு நானன்றோ முந்தியவள்?

கணி: இல்லையடி இன்மலரே இனிதுடனே கேட்டிடுவாய்.
நல்லதொரு அறிவதனை நாளென்றும் நீதந்தாய்.
இல்லயெனக் கூறிலன்யான் இனியவளே! இருந்தாலும்
சொல்லியவுன் சொல்லனைத்தும் செயல்முறையில் காட்டிடுமோர்
வல்லமைதான் உனக்குண்டோ? வாய்த்துளது எனக்கதுவும்.

அறி : எங்கனமென எடுத்தியம்பின் எனக்கதுவும் நலமாகும்.

கணி: ஒன்றிரண்டா எடுத்தியம்ப ஒழுங்கமைந்த வரிசையிலே?
நன்குணர்ந்து பார்ப்போர்க்கு நல்லறிவின் பௌதிகமே,
என்துணையோ டிணைந்தேதான் இன்றளவும் வளர்ந்துளது;
என்றென்றும் இந்நிலைதான் எள்ளளவும் ஐயமில்லை
என்பதையும் மறுக்காமல் ஏற்பாயென் மணிமொழிநீ.

அறி : அஞ்சுகிறேன் என்னுயிரே! அழகான விளக்கம்தான்-ஆனாலும்
நெஞ்சிலொரு கரம்வைத்து நேர்மையுடன் நினைந்திட்டால்
கொஞ்சமது உறுதிபெற்றுக் கொல்லைவழி வந்ததொரு
பூதமென எண்ணாமல் போற்றியது நினையுலகு?

கணி: செப்பியவுன் சொல்லனைத்தும் செப்பறிய உண்மைதான்.

அறி : பின்னறேன் பிணக்கமினி பிரியாநம் உளமதிலே?

கணி: உண்மையதைப் பகன்றிட்டாய் உளமாறக் கனிந்திட்டேன்.
நன்மைபெறும் இவ்வுலகு நம்மிருவர் இணைப்பில்தான்;
கன்னியுனைக் குறைத்தேதான் பேசியசொல் பெரிதாக்கி,
என்மனதைப் புண்படுத்தும் சொல்லேதும் சொல்லற்க.
விண்ணுலகில் ஒன்றிணைந்து வீரநடை போட்டிடுவோம்.

கணி & அறி: ஆம்.
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை
தீதறுநல் உளமோடு இணைந்தொன்றாய் இயங்கிடுவோம்.

=> இயற்றிய நாள்: 09.03.1969
(06.03.1969 'பட்டதாரி ஆசிரியர்' ஆண்டு மலரில் வெளியிடப்பட்டது)

No comments:

Post a Comment