அயலே ஒருவன் அலைவது பாரீர்;
அவனே இவ்வூர்க் காலக் கவிஞன்.
கண்டால் போதும் எண்ணிய ஒன்றைக்
கனிவாய்க் கனிவான் கவிமனம் மிகுந்தே.
கேட்டால் போதும் தேடிய ஒன்றைப்
பாட்டாய் பாடிப் பரவச மடைவான்;
காலை தொடங்கி மாலை வரையில்
சோலையி லெல்லாம் சுழன்று திரிவோன்.
வந்தோர் யாரும் வணங்கக் கண்டால்
வாழ்த்திப் பாடிக் களிக்கும் நல்லோன்.
சற்றே முன்பு நடந்த ஒன்றினை
உற்றே நன்கு கேட்டு மகிழ்வீர்.
காலையி லெல்லாம் சோலையி லெங்கும்
புள்ளும் வண்டும் ஒலிக்கக் கண்டான்;
மாலையின் கோலம் மறையும் சமயம்
சோலையின் எழிலில் சொக்கிக் கிடந்தான்.
சொக்கிய வுடனே கனவில் அவனும்
சிக்கிய மகனாய்ப் புலம்பித் தவித்தான்.
"கண்ணெ, மணியே, காதல் மலரே!
பொன்னே உன்னைப் பொருந்துவ தென்றோ?
உன்னை யன்றியிவ் வுலகோர் அடையா
விண்ணே எனினும் வேண்டே னதனை.
என்னை இன்றுநீ கண்டால் என்ன
கண்ணை மயக்குமிவ் வண்ணச் சோலையில்?
பன்னாள் முயன்றும் பருகா மதுவை
இந்நா ளேனும் இனிதே பருகிட
வந்த எனக்கு மகிழ்ந்து நீயும்
தந்து களித்துத் தனித்திடு காதலை"
என்றே அவனும் இயம்பிய நிலையில்
வந்தாள் கமலம் தன்மனப் போக்கில்.
தன்மனப் போக்கில் வந்தவள் அவளும்
இன்மனக் கவியைக் கேட்டாள் சிறிதே.
தன்னைப் பாடிய இன்பக் காதலன்
கண்ணை மூடிப் பாடிக் களித்தான்
என்றெ எண்ணிய அந்தக் கமலம்
ஒன்றே ஒன்று செய்யத் துணிந்தாள்.
சுருக்கென் றவனைக் கிள்ளிய வுடனே
நறுக்கென் றவனும் எழுந்திடக் கண்டான்.
அங்கும் இங்கும் விழித்ததைக் கண்டு
பொங்கும் மனதில் பொருள்படக் காணாள்;
"கனவோ நனவோ கால வினையோ
எனையும் இங்கே இழுத்து வந்தது?
என்றே திகைத்தாள் அவளும். அவனும்
நின்றே வியந்தான், நினைவிழந்தானே.
=> இயற்றிய நாள்: 01.11.1963
(இக்கவிதை 1963-'64 ம் ஆண்டில் வி.இ.நா.செ.நா கல்லூரி ஆண்டு மலரில் வெளியிடப் பட்டது)
No comments:
Post a Comment