அன்புளங்கள் இணைந்திடவே ஆயிரம்நாள் வீ ணாகும்
என்பதனை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையினிலே
அன்றொறுநாள் பள்ளியிலே அதுவும்சில நொடியினிலே
என்றும்மற வாவகையில் இணைந்தனவே நம்முளங்கள்.
திருமகளாய் முன்தோன்றி மாசனைத்தும் நீக்கியதோர்
முறுவல்நிறை முகங்காட்டி முத்தமிழின் மணங்கலந்து
வருகவெனக் கைகூப்பி வணக்கமெனத் தமிழ்மரபில்
வரவேற்ற சோதரியே! வாழ்கநீ பல்லாண்டு.
முன்பின்னறி யாதிருந்தும் முகமதைப்பா ராதிருந்தும்
அன்புடைநற் றோழியவள் மனங்கவர்ந்த கள்வனெனப்
பண்புடனே வரவேற்றுப் பணிசெய்த மாட்சியினை
என்சொல்லிப் போற்றிடுவேன் எங்கனமதை மறந்திடுவேன்?
உன்னுடலம் நலம்தானா உறவெல்லாம் சுகம்தானா?
தங்கையவள் தம்பியுடன் தாய்தந்தை நலம்தானா?
திங்கள்பல உருண்டோடி திரும்பிப்பா ராவிடினும்
தங்குநலம் கேட்கிறேன் தனயன்நிலை பரிதாபம்.
ஓரிருநாள் முன்புயான் உனதன்புத் தோழியவள்
ஊருக்குச் சென்றாங்கே நாலரைநாள் இருந்திட்டேன்.
நீவிடுத்த மடலதனை அவளெனக்கும் காண்பித்தாள்
யார்செய்த நாற்பயனோ மகிழ்வுற்றேன் மறுகனமே.
மடல்தீட்டிப் பத்திருநாள் முன்கேட்ட முகவரியை
கடல்தன்னில் கண்டெடுத்த கரியமணி முத்தெனவே
உடன்கண்டேன் அம்மடலில்; உவகைமிகுந் துளமாற
விடத்துடித்த முதன்மடலை முகம்மலர்ந்தே ஏற்பாயே.
தவறிழைக்கும் வழியினிலே செல்லாது நம்மன்பு
எவர்வரினும் இயலாது இதற்குமொரு தடைபோட
உவகைமிகு என்மனதில் எழுந்துள்ள பேரார்வம்
கவர்கின்ற காந்தப்புலம் போலென்றும் பெருகிடுதே.
அளவின்றி மடல்நீண்டால் அதுவும்சில நிலைதாண்டி
வளவளக்கும் எனக்கருதி வரையரையீங் கிடுகின்றேன்;
தளராது நம்மன்பு தனியாது அதன்வலிமை,
உளமாற நேசத்தை உரமிட்டே நாம்வளர்ப்போம்.
=> 1964-'66 கல்லூரி நாட்களில் பல நண்பர்களுடன் பழகிய அனுபவத்தில் எழுதிய கற்பனைக் கவிதை.
No comments:
Post a Comment