Friday, November 25, 2011

ஜெ.ஆர்.சி பணியிடைப் பயிற்சி -வரவேற்புரை

சங்கமதில் தமிழ் காத்த நகரம் மதுரையெனில்
சங்கமத்தில் காவிரி கண்டது தஞ்சையன்றோ!
இம்மண்ணின் பெருமை ஏராளம்
ஏற்புடைய சாதனைகள் தாராளம்!

இந்நாள் ஒரு பொன்நாள்.
என்னால் உன்னால் என்றில்லாமல்
நம்மால் எனக்கூடி ஏற்றம் காணும் இவ்விழா.

தூய ஜான் ஆம்புலன்ஸ் சங்கம் - மனித
நேயம் காக்கும் செஞ்சிலுவைச் சங்கம் - இவை
இரண்டும் கைகோர்த்து ஏற்பளித்த விழாவிற்கு
தலையாய கடமைகளைத் தள்ளிவைத்து
நிலமை அறிந்து தலைமைப் பொறுப்பேற்ற
மாவட்ட வருவாய் அலுவலரே!
வாழிய நின்கொற்றம் வளர்கநும் தொண்டு
வணங்கி வரவேற்றேன் வருகவே!

நேயத்தில் சிறந்தது மனித நேயம் - அதைப்
போற்றிக் காப்பது செஞ்சிலுவைச் சங்கம்.
சங்கத்தில் அங்கமாகி சஞ்சலப் படுவோர்க்கு
தங்கமனதோடு தந்திடும் உதவியே மனிதநேயம் -அதுவே
முதலுதவி - இல்லை - முதன்மையான உதவி.

இதற்கொரு பயிற்சி வேண்டாமா? - ஆம்
பயிற்சித் திட்டத்தைத் துவக்கி வைத்து
சிறப்புரை ஆற்றவந்த மேதகு நீதியரசர்
முனைவர் எஸ். மோகன் அவர்களே வருக!
தங்கள் வருகையால் தஞ்சை மண்ணே பெருமைபெரும்
தங்களைப் பெருமையோடு தலைவணங்கி வரவேற்றோம்.

இவையெல்லாம் சீரோடும் சிறப்போடும்
அவைபோற்றும் வண்ணம் அரியதொரு கடமையாற்றும்
ஆம்புலன்ஸ் சங்கத்தின் அரிய பொக்கிக்ஷமாம்
ராஜமகேந்திரரை மன்னரென்பதா? தொண்டரென்பதா?
தொண்டே சிறந்ததென்பார் தோழர் - எனவே
தொண்டுள்ளம் தாங்கிய தொண்டரே வருகவென்பேன்.

சாட்டையில்லா பம்பரமாய் சளைக்காது கடமையாற்றி
ஏட்டைப் புரட்டும் கலைவாணி ராணியென்பார்
மாவட்ட அளவிலே நடுநிலைப் பள்ளிகளை
ஒருங்கிணைக்கும் பணியிலெ ஓய்வின்றி செயலாற்றும்
அருமை அம்மணி ராணியாரே வருகவென்பேன்.

பயிற்சிக்கு ஆயத்தமாய் பாய்ந்தோடி வந்தமர்ந்து
பக்குவம் அடையவந்த ஆசிரியப் பெருமக்களே!
அழைப்பிலே தப்பினாலும் தப்பாமல் வருகைதந்த
அத்துனை பேரையும் வரவேற்றேன்.
வணங்கினேன் நன்றி. வணக்கம்.

(2001 -'03) தஞ்சாவூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றியபோது தஞ்சை நகர நடுநிலைப் பள்ளிகளில் ஜெ.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாமில் வரவேற்புரை.

No comments:

Post a Comment