Tuesday, November 22, 2011

இனிய சோலை

அழகைப் பொழியும் அழியாச் சோலையே,
அன்பை வளர்க்கும் அருமைச் சோலையே,
களைப்பை நீக்கும் கற்பகச் சோலையே,
களிப்பைக் கொடுக்கும் கனிமிகு சோலையே!

உன்னைத் தேடி வந்தவர்க் கெல்லாம்
உவகை யுடனே இடங்கொடுத் திடுவாய்;
அத்தோ டன்றி இளமைத் தென்றலை
அகம் மகிழ்ந்திடவே வீசச் செய்வாய்.

எவரையும் ஒன்றாய்ப் பாவித் திடுவாய்,
எதையும் சமமாய்ப் பகிர்ந்தே தருவாய்,
நுகரா இன்பம் நுகரச் செய்வாய்,
நுன்னிய அறிவைப் பெருகச் செய்வாய்.

உலகில் வாழும் எம்மை எல்லாம்
உவகைக் கடலில் மூழ்கச் செய்து,
உண்மைப் புகழை எய்திட வந்த
இனிய சோலைக்கென் இதய நன்றியே.

=> இயற்றிய நாள்: 02.04.1961
(கவிதை உலகில் புகத் தூண்டிய முதல் கவிதை)

No comments:

Post a Comment