திட்டங்கள் பலதீட்டிப் பயனென்ன வென்றேதான்
மட்டமுடன் பேசிவரும் மாபெருமோர் குழாமின்று
இட்டபணி செய்வதன்ன இடையின்றி நல்லியல்பின்
நட்டமின்றிச் செயலாற்றும் அரசின்புகழ் அறியாதோ?
திட்டமின்றி எத்தொழிலும் ஈடேறா தென்றுணர்ந்து
பட்டறிவு துணைகொண்டு பாரினிலே உயர்ந்தோங்க,
உற்றதொரு தருணத்தில் முப்பெரும்நல் ஐந்தாண்டுத்
திட்டங்கள் தானியற்றி நாடடைந்த பயன்காண்போம்.
எத்திசையில் நோக்கினும்நாம் எழில்மிக்க தொழில்வளத்தைச்
சித்திரத்தைக் கண்டுமனம் துள்ளுமே யதுவன்ன,
தித்திக்கும் கரும்பதனைச் சுவைத்தறிநா சுழல்வதன்ன,
முத்தினெழு ஒளியெனவே லயித்தேநாம் மகிழாமோ?
தாவரங்கள் தமக்காகப் பண்பட்ட உரப்பொருளை
நாடெங்கும் பெருக்கிவரும் தொழிற்சாலை பலவாகும்.
பாடுபடும் பாட்டளி மக்களது பயன்பெருக்கும்
ஆய்கருவி தமைச்செய்யும் தொழிலகங்கள் சிறிதாமோ?
அறிவியல் விரிவடைந்து அதிசயம் பலநிகழ்த்த
சிறிதேனும் தயங்காமல் உதவியுடன் ஊக்குவிக்கும்
குறியொன்று சிதையாமல் குன்றாகக் குவித்துவரும்
சரிவற்ற பொருளதனைச் சகலரும் வியவாமோ?
ஓரிடத்தில் நாமுள்ளோம் வேறிடத்தில் உறவுண்டு
யாரிடமும் நடைபயின்று நாம்செல்லும் நிலையில்லை.
பாரினிலே பயனளிக்கும் அதிசயங்கள் பலநிகழ்த்தும்
ஊர்திகளும் சிறிதாமோ திட்டங்களின் பயனதிலே!
அறிவென்ற அரும்பொருளை அனைவருமோர் சமநிலையில்
பெரிதளவிற் பெறுதற்கே யமைந்துள்ள பள்ளிபல.
நெறிதவறா முறையுடனே அப்பள்ளி மாணவரும்
விரிமனதின் மாணவியர் பலருந்தான் பயனடைந்தோர்.
கல்விதனைக் கருத்துடனே காலமெலாம் கற்போர்க்கு,
தொல்லுலகைக் காக்கும்பல தொழில்கள்தமைப் பயில்வோர்க்கு,
அல்லலுறும் நிலையினிலே பள்ளியர்தாம் அனைவருக்கும்
துள்ளிவரும் பொருளுதவி திட்டங்களின் பயன்தானே?
கோடிகோடி என்றுபெரும் பணமதனைச் செலவிட்டு,
நாடிநின்ற மக்களது தேவைகளை உடனளித்து,
கூடிவரும் நம்மினத்தை நோயின்றி காத்திடவே
ஓடியோடி யமைத்துளது மருந்துமனை பலவற்றை.
நோயென்ற பயமில்லை நோவதற்கே இடமில்லை
தாயென்றும் தன்னருகில் தனித்திருந்து காப்பதுபோல்
ஓய்வென்றும் கொள்ளாது ஓயாத கடமையுடன்
ஆய்ந்தறிந்து அகற்றிடுமே அரசின்று நோயதனை.
மின்சாரந் தனைக்கொண்டு வீடெல்லாம் விளக்கேற்றி,
தன்சிறிய நிலமகட்கும் எளிதாக நீர்பாய்ச்சிப்
பண்படுத்தி பக்குவமாய் பலன்முற்றும் தான்பெற்று
நன்முறையில் வாழுமின்று நாடுகொண்ட இடமெல்லாம்.
மாபெரும் நிலையடைய நற்செயல்கள் பலவுடனே
காடுதரும் கனியதனைக் கனிசமுடன் உயர்த்திடவே
பீடுதரும் அணைகள்பல பெருமளவில் அமைந்தின்று
வீடுதனில் அமர்ந்தினிது களிபெய்து வாழுகின்றோம்.
=>1964-'65 ம் ஆண்டு விருதைக் கல்லூரி திட்டமன்றம் நடத்திய கவிதப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.
No comments:
Post a Comment