Wednesday, November 23, 2011

*மஞ்சள் மலர்*

பள்ளமன்றிப் பலவரையும் தாவியே விரைந்தோடும்
நல்லகரு மேகமன்ன அலைந்தேன்யான் துணையின்றி.
செல்லும்வழி தனிலேவோர் நீர்மிக்க வாவி தோன்ற,
கள்ளவிழும் மலர்மிக்க கற்பகத் தடியினிலே
துள்ளிநகும் மானென்ன தூயபொன் மலர்க்கூட்டம்
நல்லிளந் தென்றலிலே இன்நடன மாடினவே.

கண்கொட்டு மிடைவிட்டுக் காணத்தகும் ஒளிகக்கும்
விண்தட்டுப் பால்வழியின் விளக்கேற்றும் வெள்ளியன்ன
முன்பட்டுப் பரந்தோடும் முடிவில்லாக் கோட்டினிலே
வெண்பட்டு போன்றமலர் காணும்வளை குடாவழியே
பொன்மொட்டின் மலராடும் பொலிவையே சிறிதுயான்
கண்விட்டுக் கடக்கையிலே கணக்கின்றி யான்கண்டேன்.

ஒட்டிநின்ற ஏரியின்பே ரலைகளும்தா மாடினுமே
தட்டிவிட்ட அப்புகழினி தனித்திருப் பொன்மலர்க்கே;
மட்டிலா வித்தகைய மாபெருங் காட்சிகண்டு
விட்டகலா ரெக்கவியும் மனமகிழா மனதுடனே;
நோக்கினேன் நோக்கினேன் நோகாத மனத்துடனே
போக்கினேன் என்மனதில் பொலிவற்ற எண்ணங்கள்.

சோகமே உருக்கொண்டு சோர்வுற்றுக் கிடக்கும்யான்
தாகமே தனியாது தனியாக அமரவெண்ணின்
அன்றுகண்ட(அ)த் தனிக்காட்சி அழகுமிகும் பொழிவுடனே
இன்றுவந்து என்மனதில் ஒளிர்கின்ற தென்னென்பேன்?
குன்றிவந்த என்மனதும் குதூகலம் மேலிடவே
ஒன்றிணைந்து அம்மலரோ டாடுகின்ற அழகிதுவே.

=> இயற்றிய நாள்: 15.10.1962
(இக்கவிதை 1967-'68 ம் ஆண்டில் மதுரை தியாகராசர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது)

No comments:

Post a Comment