Tuesday, November 22, 2011

கவிதைப் பயணத்தில் நான் கால்வைத்த வரலாறு

1961.ல் நான் உயர்நிலைப் பள்ளியில் ( ஜோகில்பட்டி அ.வெ.திருப்பதி ரெட்டியார் கழக உயர்நிலைப்பள்ளி-அன்று இராமநாதபுரம் மாவட்டம்-இன்று விருதுநகர் மாவட்டம்) 10-ம் வகுப்பில் பயின்ற நாட்கள். சிற்றப்பா மகன் இரா. நாராயணசாமி (அமரர்/22.11.'08) அருப்புகோட்டை கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது அப்பள்ளியின் ஆண்டுமலரில் அவர்தம் கவிதை ஒன்று வெளியானதைக் கண்டு எழுந்த உந்துதலே என்னையும் கவிதை எழுதச் செய்தது.

தொடக்கத்தில் பிழைகள் காணப்படலாம். எதையும் மாற்றாமல் படைப்புகள் அனைத்தும் படைப்பு காலம் குறிப்பிட்டு அப்படியே தரப்படுகின்றன. அன்றெல்லாம் மரபுக் கவிதைகள்தான் அரங்கேறும் இயல்பு. காலப்போக்கில் கவிதைக்கு இலக்கணம் வேண்டியதில்லை-நயம் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகி இன்று நயம் கூடிய உரைநடையே "வசன கவிதை" என்ற கவர்ச்சியுடன் பெரும் இடத்தைப் பிடித்து விட்ட நிலையில் நானும் அதில் பயணிக்கத் தொடங்கி விட்டேன். இயல்பில் வசன கவிதையைக் கவிதை என்று கூறலாகாது என்ற நிலையை மாற்றிக் கொண்டு என்னாலும் இதைச் செய்ய முடியும் என்றுணர்த்தும் வகையில் படைப்புகள்சில தரத்துணிந்தேன்.

ஒருசிலர் சுயநலத்தின் உச்சியில் இருந்து கொண்டு எங்கும் தமிழ் காண்போம் எதிலும் தமிழ் காண்போம் என்று கூறிக் கொண்டு, தம் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டி, முதல் தரமான ஆங்கிலப் பள்ளிகளில் அவர்களைச் சேர்த்து ஊருக்கு மட்டும் உபதேசம் செய்து கொண்டு அனைவரையும் முட்டாள்களாக்கி மூன்று தலைமுறைகளை முடக்கி வைத்த பெருமையோடு முன்னனியில் உலா வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் சிறியோனாகிய நானோ ஆர்வத்தின் வடிகாலாக அன்று தொடங்கி இன்றும் தொடரும் என் பணியில் படைத்த மற்றும் படைக்கும் கவிதைக் கனிகளை சற்று சுவைத்துப் பாருங்கள். நிறை கண்டால் போற்றுங்கள். குறை காணில் நயமாகக் கூறுங்கள் திருத்திக் கொள்வேன்.

நாள்: 22.11.2011

No comments:

Post a Comment