Thursday, November 24, 2011

கோட்டை சரிந்தது

மனத்திரையில் மாற்றமதை விளைவித்த மாமணியே!
எனக்கிருக்கும் ஓர்மனதில் ஒளிந்திருந்து வரும்நிலவே!!

எதையெதையோ நானெண்ணி என்மனதில் கோட்டைபல
எழிலுடனே கட்டினனே!
கதைமுற்றும் மாறியதும் கனிந்தமுகம் வாடியதே
என்னிதயம் ஏங்கிடுதே!
பதைபதைக்கும் என்னிதயச் சுமையதனை யார்துணையால்
இறக்கியொரு விடை காண்பேன்?
இதையுமென் விதியென்று சொல்லிடவா இல்லைஒரு
விளையாட்டு என்றிடவா?

தேன்கலந்த தெள்ளமுதும் தெவிட்டாத சொல்லமுதும்
வாரிக் கொடுக்காமல்
மான்மருகும் பார்வையுடன் வேல்தாங்கும் கண்ணிமைகள்
கூடிக் களித்திடவே,
வானொளிர நின்றநிலா முகந்தாங்கி முன்னின்று
புன்னகைத்த பொருளென்ன?
மீன்விழிகள் மின்மினிபோல் தாம்விளங்கத் தனிமையிலே
தலைகுனிந்த பொருளென்ன?

காந்தமென இருவிழிகள் கவர்ந்திழுக்க ஒருமுகமாய்
கலங்குகின்ற தென்மனதும்,
சேர்ந்திரண்டு கருவிழிகள் சிவந்திடுமோர் முகமதிலே
சிரிக்கின்ற நிலயேனோ?
கூர்ந்தமதி முகமதையே குறைவின்றி பார்த்திருந்தும்
குறைகண்ட நிலைதானா?
நீர்தழும்ப நின்றழுவேன் தினமிரண்டு பார்வையுடன்
யானெதையே செப்பிடுவேன்?

கொஞ்சாமல் கொஞ்சிவிளை யாடியவென் இதயத்தை
என்சொல்லித் தேற்றிடுவேன்?
நெஞ்சாரக் கூறிடுவேன் நோகாத என்னிதயம்
நோகாமல் நொந்தழுமே!
அஞ்சாத உளமதிலே அமைதிபெற வழியிலையே
ஆறுதலும் சிறிதிலையே!
பிஞ்சாகிக் காயாகிக் கனியாத நிலையதனை
யாரிடம்போய் சொல்லிடுவேன்?

ஏறிட்டுப் பார்க்கின்றேன் எட்டிநின்று ஏங்குகிறென்
எத்தனைநாள் இந்நிலையோ?
போரிட்டுப் பார்க்கின்றேன் பொல்லாத மீன்விழிதன்
பொற்கதவுத் தாழிடுதே!
யாரிட்ட சாபமிதோ யானெந்தன் மதியிழந்து
யாசிக்கும் நிலைகண்டேன்!
சோதித்த நிலைபோதும் சொல்லிடுக பொன்மனதிற்
பொதிந்துள்ள பொருளதனை.

=>1964-'66 கல்லூரி நாட்களில் பல நண்பர்களுடன் பழகிய அனுபவத்தில் எழுதிய கற்பனைக் கவிதை.

No comments:

Post a Comment