Saturday, November 26, 2011

வந்துட்டாரையா வந்துட்டார் கவிதைபாட வந்துட்டார் !

அருமை மாணவச் செல்வங்களே! செவிலியச் செம்மல்களே!!
அழைப்புக்கு நன்றி, அருமை விருந்துக்கும் நன்றி – உங்கள்
உழைப்புக்கும் நன்றி உழைத்து ஓய்ந்த உள்ளங்களுக்கும் நன்றி.
“வந்துட்டாரையா வந்துட்டார் கவிதை மொழிபேச வந்துட்டார்
கயிற்றை மணலாகத் திரித்து கவிபாட வந்துட்டார் -இன்று
என்ன சொல்லப் போகிறாறோ ஏது சொல்லப் போகிறாறோவென
மெல்லக் கிசுகிசுக்கும் சொற்கள் என்காதில் விழுகின்றன - நானும்

நயமாக நாலைந்து வரிகள் சொல்வேன் கேளுங்கள் - வரிகள்
ரசிக்கும்படி இருந்தால் மெல்ல கையைத் தட்டுங்கள் – கைவலித்தால்
அருகில் அமர்ந்திருப்போரின் முதுகைத் தட்டுங்ககள் – ஆனாலும்
என்னருகில் யாருமில்லை என்பதால் என் முதுகுக்கு தப்பியது எனவே
எள்ளளவும் பயமின்றி சிலசொற்கள் சொல்வேன் கேளுங்கள்.

நானென்னைக் கவிஞனென்று சொல்லமாட்டேன் – ஏனென்றால்
கவிஞனுக்கு வேறு பெயர் புளுகு மூட்டை அவிழ்த்து விடுபவன்.
நானோ உண்மையைச் சொல்வேன் உள்ளதைத்தான் சொல்வேன் –ஏனெனில்
பொய் சொன்னால் புளுகன் புறம் பேசினால் கயவன் – எனவே
பொய் நீக்கி புதுமை நயம் சேர்த்து பகிர்வேன் சில சொற்கள்.

வின்னில் பறந்து வட்டநிலா தொட்டு வெற்றியுடன் கால்பதித்து
இது வட்டமல்ல பெரும் விட்டம் கொண்ட கோளமென
உலகுக்கு எடுத்துக் கூறிய பெருமை சொல்ல வரவில்லை இங்கு.
உலகமே என் கையிலென ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பற்றி
கவிபாட வரவில்லை அறட்டை அரங்கமும் இங்கில்லை.

தேனாய் இனிக்கும் இன்னிசை கலந்து எழில் நடனமாடி
அடிவயிறு குளுங்கச் சிரிக்க விகடம் சேர்த்து
இயல்பான பாவனை காட்டி எல்லோரையும் மகிழ்வித்து
சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து சிறப்பான நிகழ்ச்சி தந்த
அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

இங்கு இருவருக்கு நன்றி சொல்வேன் இன்சொற்கள் சிலகேளீர்– ஒன்று
கிளிப்பிள்ளையாய் சொல்கேட்டு கின்னஸ் சாதனையென
கூண்டோடு தேர்ச்சி பெற்று தேன் சிட்டாய் பறந்து போனாலும்
தென்பாண்டி சீமையிலே சிவகங்கை மண்ணிலே சிறப்பான
இக்கல்லூரிக்கு பெருமை சேர்த்த மூத்த செவிலியருக்கு முதல் நன்றி!

எங்கள் இறுதி தேர்வு மார்ச் திங்களா – அல்லது
இந்தியச் சுதந்திரம் கண்ட ஆகஸ்டு திங்களா - என்றெல்லாம்
இரண்டும் கெட்டான் நிலைகண்டு, குழம்பித் தவித்து
மிரண்டு போய் மெல்ல மீண்டு இன்று தேர்வு கண்ட
இரண்டாம் குழு மாணவச் செவிலியரே!

நாங்களொன்றும் சளைத்தவர் அல்ல - ஜெயித்து காட்டுவோமென
சவால் விடுக்கும் சொற்கள் ஒலிக்கின்றன.
ஜெயித்துக் காட்டுவீர்களா? நூறு சதம் வெற்றி பெறுவீர்களா?
அது! இதைத்தான் எதிர் பார்க்கிறோம்.

ஏமாற்ற மாட்டீர்களே உங்கள் பதில் என்ன?
ஏமாறாதே ஏமாற்றாதே என்னும் புரட்சிப் பாடல்
உண்மயாக வேண்டும் கவிஞன் சொல் தின்மைபெற வேண்டும் - வாழ்வில்
ஏமாற்றம் வேண்டாம் பிறரை ஏமாற்றவும் வேண்டாம்.
அனைவரும் வெற்றி பெற வேண்டும் - அயலவர்
கண்ணேறு பட்டுவிட வேண்டாம்.

கண்ணேறு பட்டால் அது காயம் பட்ட உடலாகும் – நல்ல
சொல்லேறு பட்டால் அது புண்ணியம் செய்த உடலாகும்.
நல்லவை பேசுங்கள் நல்லவை கேளுங்கள் – பேசும் சொல்லில்
நயத்தோடு நாணயம் சேர்த்து பயம் நீக்கி வாழுங்கள்.

பயின்ற கல்லூரியின் புகழ் பாடுங்கள் – அருமை
நிறுவனர், முதல்வர், பயிற்றுனர் பெருமை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்! வையகம் போற்றும் உம்மை!
நன்றி! வணக்கம்!! விடை பெறுவேன்!!!

No comments:

Post a Comment