Thursday, November 24, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி

அன்றேநான் சிறுவயதில் ஆரம்ப நிலையினிலே
நன்றேதான் பயிலுங்கால் பாலரிளம் பள்ளியிலே
ஒன்றேநாம் இருவருமே என்றசொல் எழுந்திடவே
நின்றேநாம் இணைந்தோமே நீண்டதோர் வாழ்வினிலே.

நான்சென்ற இடமெல்லாம் நடமாடும் நிழல்போல
நீயெந்தன் பின்நடந்து நிலைகொள்ளா மனதுடனே
ஓய்வென்றும் கொள்ளாது ஓயாத செயலினிலே
பாய்ந்தோடிப் பங்கு கொண்டாய் பாங்குடனே.

நான்மட்டும் குறையாமோ நன்னட்பை வளர்த்ததிலே
தூண்போன்று உன்னருகே தூயதொரு மனத்தோடு
மான்போன்ற பார்வையினை நானள்ளிப் பருகிடவே
வீண்போகாப் பணிகளிலே விரைந்தேநான் ஆற்றினனே.

இன்பத்தைக் கண்டவுடன் எல்லையின்றி மகிழாதே
துன்பத்தைக் கண்டவுடன் துளியேனும் வருந்தாதே
என்றதொரு கொள்கையினை எளிதாக உணர்ந்தாங்கே
நின்னிடத்தில் நான்சொல்ல என்னிடத்தில் நீசொன்னாய்.

இம்முறையில் நாமிருவர் இணைந்திருந்து சிலகாலம்
நன்முறையில் பயின்றேதான் வெற்றிகண்டு மகிழ்ந்தோமே!
கள்ளமிலா நட்பொன்று காலமெல்லாம் நீளாமல்
அல்லலுறும் நிலைகொள்ளப் பிரிந்தோம்சில நாள்முன்பு.

நீயெங்கோ பயில்கின்றாய் நினக்குறிய இடமதிலே
நானெங்கோ நிலைகொண்டுத் தொடர்கின்றேன் உயர்படிப்பை
நாமிந்த நிலையிலின்று நாவளவில் பேசிடவும்
ஓர்சிறிய வாய்ப்பிலையே ஓரிடத்தில் வசித்தாலும்!

தவறிழைக்கும் வழியினிலே செல்லாது நம்மன்பு
எவர்வரினும் இயலாது இதற்குமொரு தடைபோட
இதன்பயனால் என்னிடையே எழுந்துள்ள பேரார்வம்
அளவின்றி என்மனதில் ஏக்கமதை வளர்த்திடுதே.

என்றெங்கே மீண்டும்நாம் பேசிடவோர் வாய்ப்புவரும்
என்றேதான் தவித்திட்ட நாளினிலே நேற்றென்னை
அன்பின்பிடி மாறாத அளவிலா நாணத்துடன்
தங்குபெரும் புத்தாண்டு வாழ்த்துக்கு என்நன்றி.

=> 1964-'66 கல்லூரி நாட்களில் பல நண்பர்களுடன் பழகிய அனுபவத்தில் எழுதிய கற்பனைக் கவிதை.

No comments:

Post a Comment