Thursday, November 24, 2011

*வள்ளுவன் காட்டும் வழி*

வள்ளுவனே நல்லவனே வான்புகழும் பெரியோனே!
உள்ளுவனே உனையாண்டும் உளமாற நானென்றே
தெள்ளமுதின் சுவையோடு எனைவாழ்த்தும் அன்புடையோய்!
சொல்லிவரும் என்னருஞ்சொல் சிலகேட்டுச் செல்வாய் நீ.

வம்பளக்க விழையாதே வாயடக்க மறவாதே
தெம்பளிக்கும் தேன்தமிழில் தெவிட்டாத சுவையுடனே
நம்பமுடி யாதசொல் நாவினின்று நீக்கியதோர்
உம்பரிலே உனையேத்தும் உண்மையினைப் பகன்றிடுவாய்.

கைநிறையப் பணமிருந்தும் கடுகளவும் பயனில்லை
கையேந்திக் கேட்போர்க்கு இல்லையென நீபகன்றாய்.
வையமதில் நீசேர்த்த வானளக்கும் செல்வமதை
ஐயமின்றி நீயளித்தால் அதுவேயுன் செல்வப்பயன்.

அன்பொன்று அமைந்திட்ட நிறைவான உன்வாழ்வில்
பண்பென்றும் குறையாமல் பணிவோடு நீவாழ்வாய்.
துன்பத்தில் உழன்றேங்கும் வறியோரைக் காப்பதிலே
இன்பத்தின் ஈற்றெல்லை நீகண்டு மகிழ்வாயே.

வருவிருந்து பார்த்தெதிரே வாவென்று நீயழைத்து
சிறுவிருந்து தானென்றும் சிறுமைதனைப் பாராமல்
பரிவுடனே சிலசொற்கள் பண்போடு நீகூறி
ஒருகுறையும் நேராமல் ஓம்பிடுக ஒருமனதாய்.

உற்றதோர் தருணத்தில் உனைக்கண்டு மனமுவந்து
மற்றெந்த நலமெதையும் எதிநோக்கா துனக்களித்த
சிற்றுதவி தானெனினும் சிறந்ததோர் நன்றியுடன்
பெற்றதொரு செல்வமெனப் பேர்சொல்லி வாழ்வாயே.

கல்விதனைக் கற்றுக்கொள் காலத்துடன் ஒட்டிக்கொள்
பல்வினைகள் ஆற்றிடவும் பாரினிலே கற்றுக்கொள்.
நல்வினைகள் சிலவேனும் நாட்டிற்கு நீயாற்றிப்
பல்லுயிர்கள் உனைப்போற்றூம் புகழினையும் ஏற்றூக்கொள்.

உரமுண்டு உடலினிலே உணர்வுண்டு உளமதிலே
கரமுண்டு குறைவினிலே கழனியிலே உழைத்துன்பாய்.
பிறர்பொருளில் மனங்கொண்டு பித்தனாய் மாறாமல்
அறநெறியிற் சிறிதளவும் பிழையாது வாழ்வாய்நீ!

நாலிருபேர் நடுவன்நீ நல்லியல்பின் தலைவனெனில்
மேலிருந்து மென்மேலும் உன்நிலையைக் காத்துக்கொள்.
நாளறிந்து இடமறிந்து நற்செயலில் நீயிறங்கி,
ஊழினையும் நீவெல்வாய் உலகினது இயல்பறிந்தால்.

தானுண்டு தொழிலுண்டு தனைச்சூழ்ந்த உறவுண்டு
ஊணுண்டு உறவுண்டு உண்பதற்குக் குறைவின்றி.
ஏனென்று எதற்கென்று பிறர்வம்பில் சேராமல்
நீயென்றும் தனித்திருந்து நிலையாக வாழ்வாயே.

=> 23.11.1965 ல் விருதைக் கல்லூரி இலக்கிய மன்றத்தால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

No comments:

Post a Comment