Friday, November 25, 2011

புத்தாண்டே வருக

தெள்ளுதமிழ் வள்ளுவனை, சிலம்பார்த்த இளங்கோவை
தந்ததமிழ்த் திருநாடே,
கள்ளவிழும் மலர்க்கூந்தல் கண்ணகிதன் கற்பதனை
உலகறியச் செய்தாய்நீ.
பிள்ளைமுகம் கண்டுருகும் தாய்க்குலத்தின் புகழதனை
தரணிக்கு எடுத்துரைத்தாய்;
உள்ளதையே உள்ளபடிச் செப்பிடும் பண்பதனை
உலகெங்கும் பரப்பிடுநீ.

செந்தமிழின் சுவையறிந்து செம்மையுடன் அதைக்காத்த
அமரர்பெரும் அண்ணாவை,
நந்தமிழர் இனம்காக்க நாளெல்லாம் உழைத்திட்ட
உண்மையன்பு உத்தமரை,
சொந்தமிலை இனியெமக்கு என்றெண்ணி எம்மின்றும்
பிரித்தகன்னி 'கீலக'மே!
பந்தமினி உன்னோடு வேண்டிலன்நீ பாவியடி!
சென்றவிழ்க இன்றேநீ.

வாராயென் 'சவுமிய'மே! வருவாயென் புதியவளே!
வழிநின்று வரவேற்றேன்;
பாராயென் புன்னகையை, பாசமது குறையமல்
பணிவோடு வணங்கிட்டேன்;
தாராய்நீ வளமான தரணிபுகழ் வாழ்வதனை
சிரந்தாழ்த்தி வேண்டுகிறேன்;
தீராத மனக்கவலை தீர்த்திடுவாய் இன்றேநீ
தினமுன்னைப் பாடிடுவேன்.

அண்ணாவின் பைத்தியமும் அன்பிற்கு வித்தான
இந்நாளின் வாத்தியாரும்,
பொன்னான மனங்கொண்ட பொற்கொடிநற் றங்கையினைப்
பொன்மேனிச் செல்விதனை,
எந்நாளும் மறவாமல் எண்ணமதில் நின்றிலங்கும்
இன்றமிழர் புத்தாண்டாம்,
இந்நாளில் இனிதான இன்சுவையின் சொல்லமுதாய்
வாழ்த்துகின்ற வகையிதுகாண்.

அன்புடையோய் அருமைமிகும் பண்புடையோய்! கள்ளமிலா
மழலைச்சொல் கனிவுடையோய்!
நின்றிலங்கும் நின்புகழும் நித்தமினி ஓங்கிடவே
நீமகிழ்ந்து வாழ்ந்திடுவாய்;
நன்குதமிழ் வளமறிந்து நாடெல்லாம் எடுத்துரைக்க
நமதன்னை அழைக்கின்றாள்;
சென்றுநனி முன்னின்று சேர்த்துவிரு கரங்கூப்பி
செயல்படுநற் றுணைபெற்று.

உதயத்தின் பகலவனை வரவேற்கும் பாங்கோடு
புத்தாண்டே வாவென்று
இதயத்தின் ஒருபகுதி இனிதாக மலர்ந்தாலும்
இன்னமுள்ள மறுபகுதி
இதயத்திற் குடிபுகுந்த இன்னுயிராம் தங்கையுனை
வழியனுப்ப மறுத்திடுதே!
முதலுக்கும் முடிவுக்கும் மூண்டுவிட்ட போரதனை
இனிதொடுக்க யார்வல்லார்?

=> தமிழ் வருடம் கீலகம் முடிந்து சவுமியம் பிறந்த நாளினை வைத்து தினமணி நாளிதழில் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment