அனைவருக்கும் வணக்கம்.
அமைதி காத்த சபையோருக்கும் வணக்கம்.
நன்றியுரை என்றாலே நகருங்கள் போவோமென
சென்றுகொண்டே இருப்பர் சிலர்.
நின்று கொஞ்சம் வேடிக்கை பார்ப்பர் இன்னும் சிலர்,
அமர்ந்திருந்து அடக்கமாய் இருப்பர் அடுத்த சிலர்.
எனவே நன்றியுரை சுருங்கச் சொல்வேன்
சற்றேநீர் செவி மடுப்பீர்.
விழாவின் விடிவெள்ளி நாயகராய் வந்து சிறப்பிக்கவிருந்த
பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய மாவட்ட ஆட்சித் தலைவர்
வரவியலாத குறை நீக்கி நிறைவு தந்த
நேர்முக உதவியாளர் அவர்களுக்கு நன்றி.
தனைத் தலைவனாய் தலைமை தாங்கி சிறப்பித்த
முதன்மைக் கல்வி அலுவலருக்கு நன்றி.
வருகை தந்த அனைவரையும் மனமாற
இருகை கூப்பி வரவேற்பளித்த
பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலருக்கு நன்றி.
மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவருக்கு நன்றி,
விழா சிறக்க பொருளுதவி அளித்த அனைவருக்கும் நன்றி.
மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்க நிலையென
எல்லாநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நன்றி,
உடன் வந்து அமர்ந்துள்ள உதவி ஆசிரியர்களுக்கு நன்றி.
பல்வேறு பள்ளித் தாளாளர்களுக்கு நன்றி,
மாணவச் செல்வங்கள் மற்றும் பெற்றோர்,
மேடை அமைப்பு, ஒலியொளி அமைப்பு,
பல்வேறு பத்திரிக்கை நிரூபர், தொலைக்காட்சி நிரூபர்
அனைவருக்கும் நன்றி.
பணீயில் இருப்போர், பணியை முடித்தோர்,
வாழ்த்துரை அளித்தோர், வாழ்த்துக்கு உரியோர்,
அனைவருக்கும் நன்றி.
இடையில் மெல்ல நழுவிச் சென்ற நல்லவர்களுக்கும் நன்றி
இறுதிவரை இருகை கட்டி இருக்கையோடு இருந்தோருக்கும் நன்றி,
எள்ளி நகையாடி ஏளனம் செய்தோருக்கும் நன்றி,
எழுந்து ஓட தயாராகிவிட்ட அனைவருக்கும் நன்றி.
விட்டுப் போன அனைவருக்கும் நன்றி. வணக்கம்.
=>18.02.'02 அன்று தஞ்சை மாவட்ட ஆசிரியர் தினவிழாவின் இறுதியில் வாசித்த நன்றியுரை.
அருமை
ReplyDelete