ஆசிரியர் பணி அறப்பணி என்பார்;
அறம் செழிக்க அனைத்தும் செழிக்கும்
வரம் பெற்று வளம் காணலாம் - நெஞ்சில்
உரம் பெற்று உறுதியும் காணலாம்.
நீண்டதொரு பயணம்செய்து நெடுநாள் கடந்தின்று
வேண்டாத எண்ணங்களை எட்டிப் புறம்வைத்து
தூண்டா மணிவிளக்காய் தூயபணி முடித்து விட்டால்
அஃதென்ன பணிஓய்வா அல்லது பணிநிறைவா?
பணி ஓய்வென்பது பதமான சொல்லாகும்
பணி நிறைவென்பது இதமான சொல்லாகும்.
மானிட வாழ்விற்கு நீண்ட ஓய்வேது?
தினம் உண்பதில் ஓய்வில்லை
உடை உடுப்பதில் ஓய்வில்லை
மனம் சிந்திக்க ஓய்வில்லை
தினம் ஐம்புலன்களுக்கும் ஓய்வில்லை
பின்னர் எதற்குத்தான் ஓய்வென்போம்?
கட்டுண்ட நிலைக்கு மட்டுமே ஓய்வெனலாம்
சற்றே விளக்கினால் சாலப் பொருந்தும்.
அரசுப் பணியில் ஆயிரம் விதிகள்
அதிலும் பலப்பல துணை விதிகள்
அன்றாடப் பணிகளில் தடையாய் நிற்கும்.
இன்றோ நீவீர் விடுதலை பெற்றீர் - இனி
விதிகள் உம்மை கட்டுப் படுத்தா;
விரும்பினால் விண்ணிலும் பாயலாம்
துரும்பாய் நினைத்தால் தூக்கி எறியலாம்
ஒருகணம் நினைத்தால் பணிஓய்வில்லை பணிநிறைவே எனலாம்.
பணிநிறைவு செய்தோர் பட்டியலில் இடம் கண்டீர்.
முப்பதுக்கும் மேலான ஆண்டுகள் பணிசெய்தீர்
தொட்டவை துலங்க தொண்டு செய்தீர்
தொண்டுள்ளம் ஓங்க வளம் கண்டீர்.
ஆயிரமாயிரம் மாணவ மணிகளுக்கு
ஏணியாய் நின்று ஏற்றம் தந்தீர்
அறியாமை நீக்கும் அருந்தொண்டு புரிந்தீர்
அண்ணைக்கும் மேலான அரவணைப்பு தந்தீர்
என்றைக்கும் நும்புகழ் நிலைத்தோங்கும்
நன்மணிகளை உருவாக்கி ஏற்றம் பலகண்டீர்.
நல்லாசிரியர் விருது பெற்றார் ஒருவர்
நல்லாசான் நலம்பெற வளம்பெற
இறைவன் ஆசியோடு என்வாழ்த்தும் கூறுவேன்.
பணிநிறைவு கண்டார் பதினைந்து பேரும்
பரிமான உலகில் மூத்தோராய் வாழியவே.
எம்மதமும் சம்மதமே எனக்கூறும் வகையிலே
மும்மதமும் சேர்ந்தின்று மூத்தநல் ஆசான்களை
சபையினில் வாழ்த்துவது சாலச் சிறந்ததே.
பொன்னணி பொன்னாடையுடன் புகழாரம் பெற்றிர்
மனமாற வாழ்த்து சொல்வேன்.
உமதரிய தொண்டுக்கோர் நன்றியென்பேன்.
நலம் கண்டு வளம் பெறுக.
வாழ்க வளமுடன். வாழிய வாழியவே.
வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.
=> 23.02.'02 அன்று தஞ்சை (ஊரகம்) நிறைவு பெறும் ஆசிரியர்களை விழாவில் வாழ்த்தியது.
அருமை
ReplyDeleteஅருமையான கவிதை. அனைவருக்கும் பொருத்தமான கவிதை
ReplyDelete